என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday 20 May 2015

நீலத்திமிங்கலத்தை பற்றி இதுவரை நீங்கள் அறியாத தகவல்கள்.

 உலகிலுள்ள தாவர, விலங்கினங்கள் பல்வேறு வகையாக பட்டியலிடப்படுகின்றன. அவற்றுள் பாலுட்டிகள் என்பவை ஒரு வகை விலங்கினங்களாகும். பாலுட்டி விலங்கினங்கள் குட்டி போட்டு பால் கொடுக்கக் கூடிய குணத்தைக் கொண்டவை. மனிதன், காண்டாமிருகம் மற்றும் பலவகை நிலவாழ் பிராணிகளும், திமிங்கலம், டால்பின்கள், ஓர்க்கா முதலிய நீர்வாழ் உயிரினங்களும் பாலுட்டி வகையை சேர்ந்தவை. ஒரு வகையில் நாம் பார்த்தோமானால் திமிங்கலங்கள் நமக்கு து|ரத்து சொந்தங்களே.





உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத்திமிங்கலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் (அதாவது 5 மாடிக்கட்டிட உயரம்) 150 டன் எடையுள்ளதாக வளரக்கூடியது.
நீலத்திமிங்கலத்தின் இதயத்தின் எடை மட்டுமே சுமார் 907 கிலோ.
நீலத்திமிங்கலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்குமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இத்தகைய ராட்சதத்தனமான அளவை விட திமிங்கலத்திடம் ராட்சதத்தனமான குணங்கள் கிடையாது.


உண்மையில் திமிங்கலங்கள், வெப்ப இரத்த நுரையீரலைக் கொண்ட பாலுட்டி விலங்கினங்களாகும். திமிங்கலங்கள் நீரில் வசிப்பினும் அவை மற்ற மீனினங்களை போல செவுள்களால் சுவாசிப்பதிலை. அவை நம்மைபோல் நுரையீரலைக் கொண்டிருப்பதால் எப்பொழுதெல்லாம் சுவாசிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை அதன் மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும்.

வேண்டும்போதெல்லாம் திமிங்கலங்கள் சுவாசிக்கின்றன என்றால் வேண்டாத பொழுது என்று ஒன்று உள்ளதா ? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. மனிதரில் சுவாசிப்பது என்றது தொடர்ச்சியாக நாம் நினைக்கிறோமோ இல்லையோ, தன்னிச்சையாக நடைபெறக்கூடிய ஒரு செயலாகும். அதிகபட்சமாக மூன்று நிமிடங்கள் மனிதர்களால் மூச்சை அடக்க முடியும். ஆனால் திமிங்கலங்களின் சுவாச முறையோ வேறு

திமிங்கலங்கலங்களின் நுரையீரல் மிகவும் பெரியதாகும். அவை நீரின் மேல்மட்டத்திற்கு வரும்போது தேவையான அளவு காற்றை தலைப்பகுதியில்.. அமைந்துள்ள மூக்கின் வழியாக உள்ளிழுத்துக்கொண்டு நீரில் மூழ்குகின்றன. நீரில் மூழ்கும்போது மூக்கு வழியாக நீர் உள்ளே நுழையாமல் இருக்க மூடி.. உள்ளது. சில திமிங்கலங்களில் ஒரு துவாரம் உள்ள மூக்கையும், சில வகை இரு துவார மூக்கையும் கொண்டுள்ளன.

 திமிங்களங்களில் 75 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு நேர அளவுகள் மூச்சை அடக்கும் திறமையுள்ளவை. ஸ்பெர்ம் திமிங்கலம் 90 நிமிடங்கள் மூச்சையடக்கவும், அலகுத்திமிங்கலம் இரண்டு மணி நேரமும் மூச்சையடக்கும் திறனும் பெற்றவையாகும்.





திமிங்கலங்களின் சுவாச மண்டலமானது அவற்றின் நீர்வாழ் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் மாறுபட்டுள்ளது. ஒரு திமிங்கலம் நிரின் அடியில் மூழ்கும் போது அதன் இரத்த ஓட்ட அளவு, இதய துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் உபயோகப்படுத்துவது கணிசமான அளவு குறைகிறது. எனவே ஒரு முறை உள்ளிழுத்துக் கொள்ளும் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மறுமுறை காற்றை உள்ளிழுக்கும் வரை தாங்குகிறது.

இவ்வாறு ஒருமுறை காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொண்டு திமிங்கலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை. இத்தகைய சிறப்பமைவுக்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும்போது, அதில் இருந்து 15 சதவிகித ஆக்ஸிஜனை மட்டுமே நமது நுரையீரலால் எடுத்துக்கொள்ளப்படுகிறது, ஆனால் திமிங்கலங்கள், உள்ளிழுக்கும் காற்றில் இருந்து 90 சதவிகித ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றிருப்பதே இவ்வகையான நீண்ட நேர மூச்சடக்கும் திறமைக்கு காரணமாகும்.



திமிங்கலங்கள் மீன்களா ? என்று கேட்டால், இல்லை என்பது தான் பதில். திமிங்கலங்கள் பாலுட்டிகள் என்றழைப்பதுதான் சரியாகும். மற்ற மீன்களில் இருந்து பல்வேறு வகைகளில் திமிங்கலங்கள் வேறுபட்டுள்ளன.



திமிங்கலங்கள்
வெப்ப இரத்த பிராணி
நுரையீரல்
முலம் சுவாசிக்கின்றன
குட்டி போட்டு பால் கொடுக்கின்றன
செதில்களற்ற தோலையும், முடிகளையும் பெற்றுள்ளன

மீன்கள்
குளிர் இரத்த பிராணி
செவுள்கள் மூலம் சுவாசிக்கின்றன
முட்டையிட்டு
குஞ்சு பொரிக்கின்றன.
செதில்கள் உள்ளன.


 ஸ்பெர்ம் திமிங்கலங்கள் தமது வாழ் நாளில் உலகையே ஒரு வலம் வரக்கூடிய தூரங்கள் நீந்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சில வகை திமிங்கலங்கள் வலசை போகின்றன. துருவ பிரதேச கடல்களில் கடும் குளிர் நிலவும் போது நிலநடுக்கோட்டு பிரதேசத்துக்கும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் கடும் வெப்பம் நிலவும் போது துருவக் கடல்களுக்கும் இடம் மாறுகின்றன. இவ்வாறு இடம்மாறும் சமயங்களில் அவை இனவிருத்தி செய்கின்றன. சிலவகை திமிங்கலங்கள் கூட்டமாக வாழ்கின்றன. சில வகைகள் தனிக்காட்டு ராஜாவாக அலைகின்றன.


நம்மில் பலவகை மொழிகள் பேசி ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்கிறோம். திமிங்கலங்கள் ஒலி சமிஞ்ஞை மூலம் தொடர்பு கொள்கின்றன. நீரில் ஒலியலைகள் வேகமாக பரவவல்லது. திமிங்கலங்கள் மூக்குப் பகுதியில் அமைந்துள்ள சிலவகை அமைப்பகளின் மூலம் ஒலியெழுப்பும் ஆற்றலை பெற்றுள்ளன. இத்தகைய திமிங்கல ராகம் ? பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நீரில் பயணிக்கின்றன.

  இனவிருத்திக் காலங்களில் ஆண் திமிங்கலங்கள் நீண்ட ராகமான சத்தங்களை தொடர்ச்சியாக எழுப்புகின்றன. இந்த ராக அலைகளால் கவரப்பட்ட பெண் திமிங்கலங்கள், துல்லியமாக ஆண் திமிங்கலத்தின் இருப்பிடத்தை கண்டறிந்து வரக்கூடிய வகையில் ஏசோனார் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது.


பெண் கர்பிணி திமிங்கலங்களின் கர்ப்ப காலம் நீண்ட நாட்களாகும். பிரசவ காலத்தில் மற்ற திமிங்கலங்கள் கர்ப்பிணியை சூழ்ந்து கொண்டு செவிலித்தாயார் போன்று உதவுகின்றன. குழந்தை திமிங்கலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கி, முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தை திமிங்கலம் உடன் தானே நீந்தக்கூடிய திறமை பெற்றது.

மனிதக் குழந்தை பிறப்பின்போது சராசரியாக 3 கிலோ எடையுடன் பிறக்கிறது. ஆனால் திமிங்கலக்குழந்தையோ பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு யானை எடையுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் பாலைத் தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ எடை வீதம் வளருகிறது.


பெண் திமிங்கலங்களின் கர்பிணிக்காலம் 12 மாதம் முதல் 17 மாதங்கள் வரை வகைக்குத் தகுந்தபடி அமைந்துள்ளது. எல்லா திமிங்கல வகைகளும் விலங்குண்ணிகளாகும். நீலத்திமிங்கலங்கள் நீரில் உள்ள விலங்கு மிதவை உயிரினங்களையும், ஸ்பெர்ம் திமிங்கலங்கள் மீன் மற்றும் கணவாய்களை உண்டும் வாழ்கின்றன.


கடலின் அடிப்பாகத்தை நோக்கிச் செல்ல, செல்ல, சூரிய வெளிச்சம் குறைந்து இருட்டாகி விடுகிறது. கடலில் 200 மீட்டர் ஆழத்திற்கு பிறகு கும்மிருட்டு நிலவுகிறது. மேலும் நீரின் அழுத்தமானது ஆழம் அதிகரிக்க அதிகரிக்கிறது. இதனால் மளிதர்கள் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் வெற்றுடம்புடன் நீரில் மூழ்க முடியாது, அப்படி மூழ்கினால் நீரின் அதிக அழுத்தத்தின் காரணமாக காது மூக்கின் வழியாக இரத்தம் வந்து, நுரையிரல் வெடித்து, இறப்பிற்கு வழி வகுக்கும்.


எனவே நீரில் மூழ்கி ஆராய்ச்சி செய்பவர்கள், நீரின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய விசேஷ உடைகளை அணிந்து கொள்கின்றனர். ஆனால் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் 7000 அடி ஆழம் வரை தடாலடியாக சென்று இரை தேடுகின்றன. அவற்றின் உடம்பை நீரின் ஆழுத்தம் மற்றும் கடுங்குளிர் பாதிக்காதா என்றால்

கடலடியில் நீரின் வெப்பநிலை 0 சென்டிகிரேடு ஆகும். இத்தகைய கடுங்குளிரைத் தாங்க திமிங்கலங்கள் அடர்த்தியான கொழுப்பு படிவத்தை உடம்பைச் சுற்றி பெற்றுள்ளன. இத்தகைய கொழுப்பு படிவங்கள், கடுங்குளிர் திமிங்கலத்தின் உடலினுள் பரவுவதைத் தடுக்கிறது. திமிங்கலங்களின் நெஞ்சுக் கூடு மற்றும் நுரையீரல் நீரின் அழுத்தத்திற்கு ஏற்ப அமுங்கிக் கொடுக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால், அதிக நீர் அழுத்தம் அதற்கு ஒரு பிரச்சனை அன்று.


பொதுவாக திமிங்கலங்கள் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. பெண் திமிங்கலங்கள் இரண்டு அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடக்கூடியவை. இத்தகைய குறைந்தளவு இனப்பெருக்கத்தால், அதிகளவு திமிங்கலங்களை வேட்டையாடுவது அதன் அழிவுக்கு கொண்டுபோய் விடும்.

கடந்த காலங்களில் அதாவது 1700 மற்றும் 1800 களில் திமிங்கலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக மூர்க்கத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டங்களில் திமிங்கல எண்ணெய்தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.

1940ம் ஆண்டுவாக்கில் பல்வேறு வகையான திமிங்கலங்களின் எண்ணிக்கை அருகி வருவது கண்டறியப்பட்டு, திமிங்கல வேட்டையை முறைப்படுத்த 1946ம் ஆண்டு சர்வதேச திமிங்கலப்பிடிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. நார்வே, கீரின்லாந்து, ஜப்பான் ஆகிய திமிங்கலங்கள் வேட்டையாடும் நாடுகள், இந்த அமைப்பில் முக்கிய உறுப்பு நாடுகளாகும்.

சர்வதேச திமிங்கல பிடிப்பு அமைப்பு 1986 ஆண்டு சில வகைத்திமிங்கலங்களை பிடிக்க தடை போட்டது. ஆனால் அந்தச் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நார்வே, ஜப்பான் நாடுகள் திமிங்கல வேட்டையை தொடர்வது, திமிங்கல இனத்தை இந்த நீலக்கிரகத்திலிருந்து மீட்கமுடியாத நீண்ட து|ரத்திற்கு துரத்தி விடும் போல் தெரிகிறது.

No comments:

Post a Comment