என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday 22 July 2015

நாக மாணிக்கம் என்பது உண்மையா? தொடரும் மர்மங்கள்.! (பகுதி02)


பாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை என்றால் வெளியே கக்கிவிட முடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக்குள்ளயே தனது வயிற்று தசைகளினால் முட்டை ஒட்டை உடைத்து அதிலுள்ள திரவப் பொருட்களை செரித்து விட்டு வெறும் முட்டை யோட்டை மட்டும் திருப்பி கக்கிவிடும். பாம்புக்குத் தெரியும் முட்டையில் பலவிதமான புரோட்டீன்கள் உள்ளன என்று. ஆகவே முட்டையின் மீது அதற்கு ஒரு விதமான ஈர்ப்பு எப்பொழுதும் உண்டு.



பறவைகள் தங்களது செரிமானத்துக்கென்றே சில கடினமான முனைகளை கொண்ட கற்களை தேடி எடுத்து விழுங்குகின்றன. நாளடைவில் அவைகளின் கூர் மழுங்கிய பின்னர் அவைகள் உண்மையிலே நன்றாக பளபளப்பாக இருக்கும்.அவை இனிமேலும் பயன்படப் போவதில்லை என்பதை அறிந்து அவற்றை தங்களது எச்சத்துடன் வெளியேற்றி விடுகின்றன.

அவற்றில் கோடியில் ஒன்று மரகதமாகவோ, மாணிக்கமாகவோ, இரத்தினமாகவோ இருக்க வாய்ப்புண்டு. அவ்வாறு வெளியேற்றப்படும் கற்களில் உள்ள எச்சத்தின் வாடையால் முட்டையோ என நினைத்து பாம்புகள் விழுங்கி விடும் வாய்ப்பு உள்ளது. பின்னர் அவற்றை செரிக்க முடியாமல் கக்கி விட்டுச் சென்றுவிடும். பறவைகள் வாழும் இடங்களில் கிடக்கும் கற்களைத்தான் விழுங்குகின்றன. இவ்வாறு தான் பாம்பு போற போக்கில் முட்டை என நினைத்து முட்டை போல உள்ள பளபளப்பான கற்களையும் விழுங்கிவிடும். ஆனால் அதை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து சிறிது நேரங்கழித்து அதை கக்கிவிடும். அவ்வாறு கக்கும் முன் அகப்பட்ட பாம்பை போஸ்ட் மார்ட்டம் செய்த காட்டுவாசிகள், ஆஹா நாகமாணிக்கமாக
இனிமேல்தான் மாறும் என கதை கட்டி விடுவார்கள். ஆனால் கக்குவதற்கு சிறிது சிரமப்படும், நேரமும் எடுத்துக் கொள்ளும். சில சமயங்களில் பாம்பு விழுங்கும் கற்களில் மாணிக்கம் போன்ற மதிப்புள்ள கற்களாக இருந்து விட வாய்ப்புண்டு. ஆனால் அதற்கு அது விலையுர்ந்த கல்லென்று கண்டிப்பாகத் தெரியாது. ஆதலால் அதையும் கக்கிவிடும்.



இதை தற்செயலாக பார்ப்பவர்கள் பாம்பு நாக மாணிக்கம் வைத்திருப்பதாகவும் அதை வைத்துதான் அதில் இருந்து வரும் ஒளியினால் இரவில் இரை தேடுவதாகவும் கதை கட்டி விடுகிறார்கள். எந்தவித உயர்ந்த கற்களுக்கும் சுயமாக ஒளிவீசும் தன்மை கிடையாது என்பதை படித்தவர்களும் மறந்துவிட்டு கற்களை தேடி அலையும்
முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது.

ஒளியின் ஏதாவது ஒரு கீற்றாவது இருந்தால் தான் கற்கள் அதை தனக்குள் சேதாரம் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான முறை பிரதிபலித்து தன்னைக் காட்டிக் கொள்ளுமே தவிர அதிலிருந்து ஒளி கிடைக்கவே கிடைக்காது. இதில் கல்லின் மதிப்பு என்பது அதன் நிறத்தையும் அதன் பிரதிபலிக்கும் தன்மையையும் அது ஏற்படுத்தும் ஒளி விலகலின் கோண(Refractive Index) அளவையும் பொறுத்துத் தான் மதிப்பிடப்படுகிறது.
ஒரு கல்லின் மதிப்பு அதற்கு பட்டை தீட்டப் படும் தரத்தின் தன்மையைப் பொறுத்தும் பட்டைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும்தான் உயருகிறது.


வைரத்திற்கும் சொந்தமாக ஒளி கிடையாது. வைரம்தான் உலகத்திலேயே மிகவும் கடினமான பொருள் என்பதால் அதன் பட்டை பரப்பு எளிதில் சேதமாகாததால் நீண்ட காலத்திற்கு அதன் ஒளி பிரதிபலிக்கும் தன்மை மாறாமல் இருக்கிறது. மேலும் வைரத்திற்குத்தான் ஒளிவிலகலின் கோண அளவும் அதிகம். அதாவது அதனூடே ஒளி செல்லும்
வேகம் குறைவாக இருக்கிறது. ஆனால் இது வரைக்கும் எந்த ஒரு வரலாற்று பதிவிலும் நாகமாணிக்கம் பற்றிய தகவல்கள் இல்லை.

No comments:

Post a Comment