என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday 13 July 2016

கருந்துளைகள் இன்னொரு பிரபஞ்சத்துக்கான வாசல்!:40 வருடமாக நீடிக்கும் சர்ச்சை தொடர்பில் ஹாவ்கிங்!

மது பிரபஞ்சத்திலுள்ள பல கூறுகள் இன்றும் பூரணமாக விளக்கப்படுத்தப்படாது மனிதனை வியப்பில் ஆழ்த்துபவையாகவே இருந்து வருகின்றன.


இவற்றில் முக்கியமானது Black hole எனப்படும் கருந்துளைகள் ஆகும். இந்தக் கருந்துளைகள் பற்றிய தனது விளக்கத்துக்காகப் புகழ் பெற்றவர் தான் இன்று நம்முடன் வாழ்ந்து வரும் 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாவ்கிங். இவர் அண்மையில் கடந்த 40 வருடங்களாக கருந்துளைகள் தொடர்பான சர்ச்சைக்குப் புதிய விளக்கம் அளித்துள்ளார்.


இதுவரை பிரபஞ்சத்தில் கருந்துளைகளைக் கடக்க நேரிடும் ஏதேனும் பொருள் கருந்துளையின் மிக அசுரத்தனமான ஈர்ப்பு விசையால் அதனுள் இழுக்கப் பட்டு முற்றாக அதில் கரைந்து காணாமற் போய் விடும் அல்லது அதற்கு என்ன நடக்கும் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு வழியும் இல்லை என்றே கருதப் பட்டது. ஆனால் இதற்கு ஸ்டீபன் ஹாவ்கிங்க் சமீபத்தில் புதிய விளக்கம் அளித்துள்ளார். அதாவது கருந்துளையினைக் கடக்க நேரிடும் பொருளானது அதனுள் ஈர்க்கப் பட்டு முற்றாக சிதைவடைந்து போகாது. பதிலாக நமது பிரபஞ்சத்துக்கு சமனான இன்னொரு பிரபஞ்சத்தை அது சென்றடையும் என்றுள்ளார். அதாவது கருந்துளைகள் இன்னொரு பிரபஞ்சத்துக்கான அது நம்முடையதைப் போன்றதோ அல்லது வித்தியாசமானதோ எதுவாக இருந்தாலும் அதற்கான வாசலாகச் செயற்படுகின்றன என்பதே அவரின் புதிய கருத்தாகும்.


ALS என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஸ்டீபன் ஹாவ்கிங் தனது ஒலி வெளிப்படுத்தும் கருவி (speech synthesizer) மூலம் தெரிவித்த கூற்றில் இவ்வாறு கருந்துளைகள் புதிய பிரபஞ்சத்துக்கான வாசலாகச் செயற்படுவதற்கு அவற்றின் மையத்திலுள்ள துளையானது பெரிதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அத்துளை மிக வேகமாக சுழலுவதால் நீங்கள் செல்லும் புதிய பிரபஞ்சத்தில் இருந்து மீளப் பழைய இடத்துக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் கிராஃபிக்ஸ் புகைப் படங்களில் காட்டப்படுவது போன்று கருந்துளைகள் உண்மையில் கருப்பு நிறமுடையவை அல்ல என்றும் தம்மில் சிக்கும் எதுவும் நிரந்தர சிறை போன்று அதில் அடைபட்டு அழிந்து விடும் என்று முன்னர் கருதப்பட்ட சிந்தனையானது பிழையானது என்றும் ஹாவ்கிங்க் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தத்துவ இயற்பியலில் (theoretical pyhsics) மிகச்சிறிய அணுக்கள் துணை அணுத் துணிக்கைகளின் செயற்பாட்டை விளக்கும் குவாண்டம் கொள்கை (Quantum theory) மற்றும் மிகப் பெரிய கூறுகளான பூமி, சூரியன், கிரகங்கள் மற்றும் அண்டங்களின் ஈர்ப்பு இயக்கத்தை விளக்கும் சார்புக் கொள்கை ஆகியவையே அடிப்படைக் கோட்பாடுகளாக விளங்குகின்றன. ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கைப் படி கருந்துளையைக் கடக்கும் எந்த ஒரு பொருளும் அல்லது தகவலும் முற்றாக அழிந்து விடும் என்று கூறப்படினும் அதற்குச் சமனான குவாண்டம் கொள்கைப் படி பிரபஞ்சத்திலுள்ள எந்த ஒரு தகவலும் ஒருபோதும் அழிக்கப் பட முடியாது என்றும் கூறுகின்றது. இதனால் 1970 ஆம் ஆண்டு முதல் இவற்றை இணைக்கும் முயற்சி காரணமாக அறிவியலாளர்கள் மத்தியில் கணித ரீதியிலான சிக்கலான குழப்பங்கள் அதிகரித்துள்ளதுடன் இவை அனைத்தும் இணைந்து தகவல் இழப்புக் குழப்பம் (information loss paradox) என்ற நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்று ஹாவ்கிங் சுட்டிக் காட்டியுள்ளார்.


இதன் காரணமாகவே ஹாவ்கிங்கின் புதிய தத்துவம் இவ்வாறு அமைந்துள்ளது. அதாவது கருந்துளைகள் நிரந்தர சிறைகள் அல்ல. பிரபஞ்சத்தில் தகவல் ஆனது அவற்றின் வாயிலாக வெளியேறி வேறு சில சமாந்தரமான பிரபஞ்சங்களில் சேகரிக்கப்படுகின்றன. இவை எவ்வாறு கருந்துளைகள் வழியாக வெளியேறுகின்றன என்பது தொடர்பில் ஒரு பொறிமுறையைத் தான் கண்டுபிடித்துள்ளதாகவும் ஹாவ்கிங்க் தெரிவித்துள்ளார். அதாவது கருந்துளைகளால் சடப்பொருட்கள் சிதைக்கப் படினும் தகவல்கள் வெளியேறி விடும் என்பதை இன்னும் சில விஞ்ஞானிகளும் ஆமோதித்துள்ளனர். இன்றைய விஞ்ஞான உலகின் மிகக் சிக்கலான இக்கேள்விக்கான விடையை ஹாவ்கிங் ஸ்டொக்ஹால்மில் KTH என்ற தொழிநுட்பத்துக்கான ரோயல் மையத்தில் விஞ்ஞானிகளுக்கு இடையேயான விவாதத்தின் போதும் முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment