என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday 7 September 2016

கொஞ்சம் வினோதம், கொஞ்சம் விசித்திரம்!... அதுவும் இந்தியாவில் வாங்க பாக்கலாம்!...

ந்தியாவில் விசித்திரம் அல்லது வினோதங்களுக்கு பஞ்சமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவே ஒரு விசித்திரமான நாடு தான்.

தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? தாஜ் மஹாலை கட்டியது யார்? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள் எத்தனையோ தொக்கி நிற்கின்றன. அந்த வகையில் காற்றில் மிதக்கும் கல், எலும்புக்கூடுகள் நிறைந்த ஏரி, பறவைகள் தற்கொலை செய்யும் இடம், வீடுகளுக்கு கதவுகளே இல்லாத கிராமம் என்று உங்களுக்காக அதிசயமான மர்மங்களும், மர்மமான அதிசயங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.


மேக்னடிக் ஹில்

உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம். ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம். இந்த மேக்னடிக் ஹில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.


காற்றில் மிதக்கும் கல்

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஷிவாபூர் என்ற இடத்தில் இந்த காற்றில் மிதக்கும் கல் காணப்படுகிறது. இந்தக் கல்லை 11 பேர் தங்கள் விரல்களால் தொட்டு "கம்மார் அலி தர்வேஷ்" என்று சொன்னால் காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுமாம். 200 கிலோ எடை கொண்ட இந்தக் கல் காற்றில் மிதக்கும் என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்றாகவே இருந்து வருகிறது. எனினும் கம்மார் அலி என்ற அற்புத சக்தி படைத்த சூஃபி ஞானி இப்பகுதியில் வாழ்ந்ததாகவும், அவருடைய சக்தியால்தான் இந்தக் கல் காற்றில் மிதப்பதாகவும் உள்ளூர் மக்கள் நம்பி வருகின்றனர்.


கொடிஞ்சி இரட்டையர் கிராமம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடிஞ்சி கிராமம் இரட்டையர்கள் கிராமம் என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் 2008-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. அதாவது முதலில் 100 இரட்டையர்கள் என்று கணக்கிடப்பட்டு, 200 இரட்டையர்கள் என்றாகி தற்போது 400 ஜோடி இரட்டையர்களை இந்த கிராமம் கொண்டிருக்கிறது

அதுவும் உலக அளவில் இந்தியா இரட்டையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இந்த கிராமம் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.


ரூப்குந்த் லேக் 

1942-ஆம் ஆண்டு உத்தரகண்ட்டின் உறைந்த ஏரியான ரூப்குந்த் லேக்கில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் காட்டிலாக்க அதிகாரி ஏரி முழுக்க எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். அதோடு அந்த ஆண்டு கோடை காலத்தில் உருகிய ஏரி இன்னுமின்னும் மனித எலும்புக்கூடுகளை கக்கிக்கொண்டிருந்தது. முதலில் இரண்டாம் உலகப்போரில் இந்தியா நோக்கி வந்த ஜப்பானிய சிப்பாய்களின் எலும்புக்கூடுகள் இவையென்று சொல்லப்பட்டன. ஆனால் அறிவியல் அறிஞர்கள் இந்த எலும்புக்கூடுகள் 9-ஆம் நூற்றாண்டில் இறந்த இந்திய பழங்குடியினரின் கூடுகள் என்று தற்போது கண்டுபிடித்துள்ளனர்.


பறவைகள் தற்கொலை செய்யும் இடம்!

அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவத்தில் அமைந்திருக்கும் ஜதிங்கா எனும் கிராமம் பறவைகளின் தற்கொலை பூமியாக மாறி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது இந்த பருவத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறி அது பறவைகளின் உடலியல் இயக்கங்களை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது என்ற ஒருசாரார் நம்புகின்றனர்.

அதேபோல பறவைகள் கூடு அதிவேக காற்றால் சிதறடிக்கப்பட்டு பறவைகளை ஒரு ஒளியை நோக்கி திருப்பிவிட்டு மூங்கில் கம்புகளை கொண்டு பழங்குடியின மக்கள்தான் அடித்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


ஷனி ஷிங்க்னாபூர் 

ஷிர்டியிலிருந்து 73 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஷனி ஷிங்க்னாபூர் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாதாம்! இங்குள்ள சனி பகவான் கோயிலில் வீற்றிருக்கும் சனீஸ்வரரே தங்கள் வீடு மற்றும் உடைமைகளை திருட்டிலிருந்து காத்து வருவதாக கிராம மக்கள் நம்புகின்றனர். திருட்டில் ஈடுபடுபவர்கள் சனீஸ்வரரின் சக்தியால் அன்றைய தினமே கண் பார்வை பறிபோய் குருடாகி விடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்குள் ஆண் பக்தர்கள் மட்டுமே சென்று சனீஸ்வரரை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.


சிரபுஞ்சி வேர்ப்பாலம்‬

மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் காணப்படும் இந்த வேர்ப்பாலம் ரப்பர் மரத்தின் வேர்களால் உருவானது.
மேகாலயாவின் பழங்குடியினரான ‘வார்-காசிஸ்’ மக்கள்தான் முதன் முதலில் இந்த வேர்ப்பாலத்தின் மூலம் ஆற்றை கடக்க ஆரம்பித்தனர்.
இதன் பின்னர் இப்பகுதி மக்கள் ரப்பர் மரங்களில் செயற்கையாக வேர்ப்பாலங்களை உருவாக்க தொடங்கினர்.
அதாவது பாக்கு மரத்தின் தடித்த பாகத்தை துளையிட்டு அதில் ரப்பர் மர வேர்களை நுழையச்செய்து அது அப்பக்கம் வளர்ந்து சென்ற பிறகு மண்ணுக்குள் செல்கிறது.
இதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.
அதன் பிறகு பயணிக்க தகுதியான, உறுதியான வேர்ப்பாலமாக இது மாறிவிடும்.


மாமல்லபுரம் சமநிலை பாறை‬

மாமல்லபுரத்தில் காணப்படும் இந்த சமநிலை பாறை ‘கிருஷ்ணாவின்
வெண்ணைப்பந்து’ என்று அழைக்கப்படுகிறது.
பைசாவின் சாய்ந்த கோபுரம் போலவே எப்படா விழப்போகுது என்பது போன்றே தோற்றமளித்து கொண்டிருக்கிறது இந்தப் பாறை.
இதே போன்ற பாறைகள் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரிலும், கன்ஹா தேசிய பூங்காவிலும் காணப்படுகின்றன.


லொனார் விண்கல் பள்ளம்

மகாராஷ்டிராவில் புல்தான மாவட்டத்தில் உள்ள லொனாரின் விண்கல் பள்ளம் தான் உலகிலேயே தீக்கல் பாறை வகைகளில் அமைந்த ஒரே உப்பு நீர் ஏரி ஆகும்.
அதோடு இந்த விண்கல் பள்ளம் 52,000 அண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டது என்பது இதன் கூடுதல் சிறப்பு.
இங்கு மயில், வாத்து, ஆந்தை, சிவப்பு மூக்கு ஆள்காட்டி போன்ற பறவைகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் லொனார் ஏரியே அழகு கொஞ்சும் காட்சிக்கு சொந்தமானது.
நமது பிரபஞ்சத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் குறித்து அறிய விரும்புபவர்களும், புவியியல் மற்றும் அறிவியல் மீது நாட்டம் கொண்ட பயணிகளும் வாழ்கையில் ஒருமுறையாவது கண்டிப்பாக லொனார் ஏரிக்கு வர வேண்டும்.


போரா குகைகள்‬

போரா குஹாலு என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படும் போரா குகைகள் அனந்தகிரி குன்றின் ஒரு பகுதியாக இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த குகைகள் கடல் மட்டத்திலிருந்து 2313 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு, இந்தியாவின் மிகப்பெரிய குகைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. பெரும்பாலும் சுண்ணாம்புக் கற்களாலேயே உருவாகியிருக்கும் போரா குகைகள் 80 மீட்டர் ஆழம் கொண்டதால், இந்தியாவின் ஆழம் மிகுந்த குகையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக போரா குகைகள் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியல் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.


மணிகரன் வெந்நீர் ஊற்றுகள் 
‬ ‪
மணிகரன் நகரில் உள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக திகழும் இந்த வெந்நீர் ஊற்றுகளில் ஒன்று ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாராவிலும் மற்றொன்று பார்வதி ஆற்றுப்பகுதியிலும் அமைந்துள்ளது. பார்வதி ஆற்றின் கரையிலுள்ள வெந்நீர் ஊற்று சுற்றுலப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த ஊற்று நீரில் பல கதிரியக்க கனிமங்களும் இயற்கையான யுரேனியத் தாதும் கலந்திருப்பது பல ஆராய்ச்சிகளுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அமர்நாத் பனிலிங்கம்‬

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் இமயமலையின் மீது 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் அமர்நாத் குகை அமைத்துள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலங்களில் பனிலிங்கத்தை தரிசிக்கலாம். அதாவது இயற்கையாக உருவாகும் பனிலிங்கமாக கருத்தப்படும் இது ஜூன் மாதம் உருவாகி ஆகஸ்ட் மாதத்தில் கரைந்துவிடும். இதனை தரிசிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் குகைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.


புல்லட் பாபா கோயில்

ஒரு புல்லட் மோட்டார் சைக்கிளை கடவுளாக மக்கள் வணங்கும் அதிசயத்தை காண நீங்கள் ராஜஸ்தானின் ஜோத்பூருக்குத்தான் வரவேண்டும். இந்த வினோதமான ஆலயம் ஜோத்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் சோட்டிலா எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது. அதாவது 1991-ஆம் ஆண்டு ஓம் சிங் ரத்தோர் என்பவர் தன் புல்லட்டில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு மரத்தில் மோதி இறந்துவிட்டார்.

அதன்பிறகு அந்த வாகனம் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மறுநாள் அது விபத்து நடந்த மரத்தருகே நின்றுகொண்டிருந்ததாம். எனவே அந்த புல்லட் திரும்பவும் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டு சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

அப்படி இருந்தும் மறுநாள் அதே மரத்தருகே சென்றுவிட்டதாம் அந்த புல்லட் வண்டி. அன்றிலிருந்து ஓம் பன்னா அல்லது புல்லட் பாபா ஆலயம் என்று அந்த மரத்தையும், புல்லட்டையும் அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகிறார்கள். யார் இந்த புல்லட் பாபாவை வணங்கினாலும் அவர்கள் பயணம் பாதுகாப்பானதாக அமையும் என்று நம்பப்படுகிறது.



தரையை தொடாமல் நிற்கும் தூண்கள் 

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற, லேபாக் ஷி கோவிலில் உள்ள, 70க்கும் மேற்பட்ட துாண்கள், தரையை தொடாமல், அந்தரத்தில் காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்அடைகின்றனர்.

பகவான் ராமன், லட்சுமணன் மற்றும் சீதை ஆகியோர் வனவாசத்திற்காக வந்தபோது, இலங்கை அரசன் ராவணன், சீதையை சிறைபிடித்து கடத்தி சென்றான். அப்போது, இந்த பகுதியை கடக்கும்போது, பறவையினத்தைச் சேர்ந்த, ஜடாயு, ராவணனுடன் போரிட்டு காயமடைந்து கீழே விழுந்தது. சீதையை கடத்தி செல்லும் ராவணன் குறித்த தகவலை கூறிய ஜடாயு, ராமனுக்கு வழிகாட்டியது. பின்னர் இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்ட ராமன், ஜடாயு விழுந்த இடத்திற்கு வந்து, 'லே பாக் ஷி' என்று கூறியதால், இந்த இடத்திற்கு, 'லேபாக் ஷி' என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர். தெலுங்கில், 'லே பாக் ஷி' என்றால், 'எழுந்திரு பறவையே' என்று பொருள்.


மேலும், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி சிலை, ராமர் பாதம் போன்றவை இக்கோவிலின் சிறப்பம்சங்கள்.கடந்த 1583ம் ஆண்டு (16ம் நுாற்றாண்டு), விஜயநகர அரசரிடம் பணிபுரிந்த, விருபண்ணா, வீரண்ணா ஆகியோரால் இந்த கோவில் கட்டப்பட்டது என்றும், அகத்தியரால் கட்டப்பட்டது என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

இந்த கோவிலில் உள்ள, 70க்கும் மேற்பட்ட துாண்கள், தரையுடன் தொடர்பின்றி,

அந்தரத்தில் தொங்குவதன் ரகசியத்தை அறிய முயன்ற, வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் தோல்வி அடைந்துஉள்ளனர்.ஒரு பொறியாளர், கோவில் துாணை தகர்த்து உண்மையறிய முயன்றபோது, அனைத்து துாண்களும், காற்றில் அசைந்தாடியதால், தன் முயற்சியை கைவிட்டார்.இங்குள்ள துாண்களுக்கு அடியில் துணியை நுழைத்தால், எந்தவித சேதமுமின்றி, அடுத்த பக்கத்தில் இழுத்துவிடலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.


அணையாமல் எரியும் ”ஜுவாலா ஜி” சுடர்

ஒரு நித்திய சுடரின் (Jwala ji) ஆரம்பமும் அறிந்திராமல், இன்றுவரை அதை அணைக்கவும் முடியாமல், அது தொடர்ந்து எரிவதற்கான ஆதார மூலத்தையும் ஆராய முடியாமல் இருப்பதுதான் ஜுவாலா ஜி கோவிலின் சிறப்பு.

இமயமலை சாரலில் உள்ள இமாசல பிரதேச மாநிலத்தில் காங்க்ரா மாவட்டத்தில் இந்த ஜுவாலா ஜி கோவில் உள்ளது. இது சக்தியின் வடிவமாகவும் இந்துமத வழிபாட்டு தலமாகவும் விளங்குகிறது. ஜுவால தேவி, ஜுவால முகி என்றும் இது அழைக்கப்படுகிறது.

இங்கு சமஸ்கிருதம், தேவநகரி, ஹிஜ்ரி, பஞ்சாபி மொழிகளிலான 1158, 1745, 1802 ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கல்வெட்டு குறிப்புகளும் காணப்படுகிறது.

இந்த ஜுவாலை தோற்றம் பற்றிய கதையோ, நிலவுக்கும் எட்டாத பழங்கால தன்மையுடையது.

இதிகாச புராண கதையின்படி, சக்தியின் தந்தை, சிவன் மீது குற்றம் சுமத்தியதால் சக்தி தனது புனித சக்தியால் தானாகவே இறக்கிறார். அதனால், சிவபெருமான் மரண மயக்கமாகி விழுகிறார்.

இதனால், மகாவிஷ்ணு சக்தியின் உடலை 51 பாகங்களாக வெட்டி 51 இடங்களில் வீசுகிறார்.

சக்தியின் நாக்கு விழுந்த இடமே ஜுவாலா ஜி கோவில். சக்தியின் மற்ற உடற்பகுதிகள் விழுந்த இடங்கள் ஒவ்வொன்றுமே சக்தி பீடங்களாக புகழான கோவில்களோடு விளங்குகின்றன.

இந்த நித்திய சுடர் சக்தி நாக்கு விழுந்த நாளிலிருந்து எரிவதாக புராணம் கூறுகிறது.

7 ஜுவாலைகளில் தெரிவது ஏழு தெய்வ சகோதரிகள், 9 ஜுவாலைகளில் தெரிவது ஒன்பது துர்கைகள் என துதிக்கின்றனர்.

சுடர் நீலநிறத்தில் எரிவதால் வெளியாகும் எரிபொருள் முழுபயன்பாட்டோடு எரிவதாக அறிவியல் பார்க்கிறது.

இதற்கு காரணமாக அந்த இடத்தில் இயற்கை வாயு அல்லது வேறு ஏதேனும் இயற்கை எரிபொருள் மூலம் இருக்கலாம் என கருதப்படுகிறது.

அதே சமயம், இயற்கை வாயு ஊற்றுகள் உள்ள பல இடங்களில் இதுபோன்ற அணைக்கவே முடியாத நெடுங்கால நித்ய சுடர் எங்கும் ஏற்பட்டதில்லை.

மொகலாய பேரரசர்களில் ஒருவரான அக்பர் தனது ஆட்சியில் இந்த நித்திய சுடரை அணைக்க முயன்றார்.

அது முடியாமல் போனதால் அந்த வினோத சக்தியை வியந்து தங்கம் போல குடைவடிவிலான ஒரு பொருளை அன்பளிப்பு செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் நேருவும் தனது ஆட்சியில் புவியியலாளர்களை அழைத்துச்சென்று அதை அணைக்கவும் ஆராயவும் முயன்றார். இரண்டுமே சாத்தியமாகாமல் போனது.

ஒரு புனித தன்மையை ஏற்படுத்திவிட்டதால் மேற்கொண்டு, ஆணைப்பதற்கும் ஆராய்வதற்கும் உலகளவிலான பெரிய முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்படவில்லை.


இதே போல, பாகு அடெஷ்கா, என்ற இந்துக்கள் மற்றும் ஸொராஷ்டிரர்கள் வழிபாட்டுத்தலம் அஸெர்பைஜனில் உள்ளது.

அங்கும் பாறைகளின் பின்புலத்தில் நித்திய சுடர் எரிந்தது. 16 ம் நூற்றாண்டு வாக்கில் ஏற்பட்ட அந்த சுடர் சமீபகாலம் வரை எரிந்து அணைந்தது குறிப்பிடத்தக்கது.

சக்தி நகரிலும் ஒரு ஜுவாலா தேவி:

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சக்தி நகரிலும் ஜுவாலா தேவி கோவில் உள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.

இந்த அம்மனுக்கு தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு, உலோகத்தாலான நாக்கை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

நேபாளத்திலும் ஜுவாலா மாய்:

நேபாலில் தோரங் லா மலை அடிவாரத்திலிருந்து 3710 மீட்டர் உயரத்தில், முஸ்டங் மாவட்டத்தில், முக்திநாத் ஊரில் நித்திய சுடர் கோயில் அமைந்துள்ளது.

நிலம் மற்றும் நீரிலும் இயற்கை வாயு ஊற்றின் காரணமாக சுடர் எரிகிறது. இதையும் இங்குள்ள இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினரும் புனிதமாக வழிபடுகின்றனர்.

ஆனாலும், ஜுவாலா ஜி கோயிலில்தான் இன்னும் குறையாமலும் அணையாமலும் பிரம்மாண்டமாக எரிகிறது, அதனால், அறிவியல் எங்கு திணறுகிறதோ அந்த இடத்தில் ஆன்மீகம் தொடங்குவதாக ஒரு நம்பிக்கையில் பலர் கூறுகின்றனர்.

மற்ற இடங்களைவிட, இயற்கை எரிபொருள் மூலம் ஜுவாலா ஜியில் அதிகமாக இருக்கலாம் இந்த தீயும் ஒருநாள் அடங்கலாம் என்று வேறொரு நம்பிக்கையில் சிலர் கூறுகின்றனர்.



உலகிலேயே மிகப்பெரிய ஆலமரம் 

உலகிலேயே மிகப்பெரிய ஆலமரம் கல்கத்தா ஜகதீஷ் சந்திரபோஸ் விலங்கியல் பூங்காவில் உள்ளது....
இம்மரத்திற்கு 3300 விழுதுகள் உள்ளன....
இந்த ஒரு மரத்தை சுற்றுவதற்கு 350 மீட்டர் நீள சாலை போடப்பட்டுள்ளது...
இந்த மரத்தின் வயது 1250...
தொலைவிலிருந்து பார்க்கும்போது இந்த ஒரு மரமே காடுபோல காட்சியளிக்கிறது.



ராமேஸ்வரம் மிதக்கும் கல்

ராமேஸ்வரத்தில் கிடைக்கும் சில அரிய வகை பாறைகள் தண்ணீரில் மிதக்கும் தன்மையை பெற்றுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. தீவு நகரமான ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாபா மடத்தில் இந்த மிதக்கும் பாறைகள் உள்ளன.‘

அந்த மடத்தில் ஒரு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு பாறைகளை மிதக்க விட்டிருக்கின்றனர். மேலும், ராமர் சீதையை மீட்க கட்டிய பாலத்தை கட்ட பயன்படுத்திய கற்களாக இது இருக்கலாம் என்று பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது. எனவே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த கனமான கற்களை தங்கள் கைகளால் தூக்கி பார்க்கின்றனர். பின்னர் அதனை தங்கள் கைகள் நீரில் விடும்போது அது முழுகாமல் மிதப்பதை கண்டு வியப்பில் மெய்சிலிர்த்து போகின்றனர்.


இன்னமும் நிறைய அதிசயங்கள் இந்தியாவில் உள்ளன அதை பற்றி வேறு ஒரு பதிவில்.

1 comment:

  1. உண்மையவே உங்க பதிவு அனைத்தும் மிக்க அருமை தோழரே

    ReplyDelete